Tuesday, December 8, 2009

இன்னுமொரு சோசலிசம்

பொன்ராஜும் நானும்-தினமும்
மதுஅருந்துவது வழக்கம்.
அவருக்கும் எனக்குமான
வயதுவித்தியாசம் அதிகம்.
அவருக்கும் எனக்குமான
கருத்துவேறுபாடுகளும் அதிகம்.
முதல் கோப்பையின்போது
பொதுவாக எங்கள் விவாதம்
பாகிஸ்தான் பிரிவினை பற்றியதாகவோ
காந்தி-நேதாஜி குறித்தோ
சேகுவேராவின் கடைசி புரட்சி குறித்தோ
மதங்களின் அவசியமின்மை குறித்தோ..
லியோ டால்ஸ்டாயின்
ஆன்மீக இலக்கியங்கள் பற்றியோ.
அல்லது
காராசேவுக்கும் மதுவுக்குமான பொருத்தம்
பற்றியதாகவோ இருக்கும்..


பிராந்தி தலைவலிக்குமென்றும்
ரம் மட்டுமே தூங்கி எழுந்தபின்
மலர்ச்சியாக இருக்குமென்றும்
அவர் அடிக்கடி சொல்வதுண்டு ...
மேலுமவர் வட்டவட்டமாக
புகைவிடுவதில் வல்லவர்..


எங்கள் எல்லா விவாதங்களிலும்
முரண்பட்டே இருந்திருக்கிறோம்
சமகால கவிஞர்களை பற்றிய
புள்ளி விவரங்கள்
ஒரு கவிஞனுக்கு அவசியமில்லை
என்பதை அவர் -எப்போதும்
ஏற்றுகொள்ளுவதே இல்லை
மேலும் முத்துராமலிங்க தேவரை
விட்டு கொடுப்பதே இல்லை

இன்னும்
கண்ணதாசனின் கடைசி கால
மாற்றம் குறித்தோ
திரையிசையின் போக்கு குறித்தோ
எங்கள் விவாதம் நீண்டுகொண்டே
கடைசி கோப்பையை அருந்தியபின்
ஞாபகம் இல்லாத வார்த்தைகளால்
சமாதானமாகியிருப்போம்......
இப்படியாக .....
ஓர் இரவு கடைசி கோப்பையின் போது
"ங்கோத்தா தே............. சிறுக்கி வுள்ள
ஏச்சுபுட்டு போயித்தா " என்ற போது
எங்களுக்குள் சோசலிசம் இருந்தது..