Friday, August 7, 2009

மறந்துவிடப்பட்ட மானுடப் புள்ளிகள்

ஆதியில் நான்
சுழி சுழியிலிருந்து வந்ததாக
பிரகடனப்படுத்தப்பட்டேன்

அண்டங்கள் ,பேரண்டங்கள்
பால்வீதிகள், கோள்கள்
வால்நட்சத்திரங்களென
யாவும் வட்ட நீள்வளயமாக- நான்
வரைந்தேனென சொன்னான்
சிவப்பு சட்டைக்காரன்

சாம்பல் பூசிக்கொண்டும்
முள்முடி, சிலுவைகளென
யாதுமற்ற வெளியென
போதி மரமென
சுழியிலிருந்து நான்
இயல் எண்களாய் வளர வளர
ஆதியில் எனக்கு
சுழியிட்டவன் மேல்
சந்தேகம் வலுத்தது

வரைகோடுகள் நீளும் பாதையெங்கும்
சக்கரங்கள் உருள உருள
தட்டையாயிருந்த உலகம்
உருண்டையான போது

இயற்கை விளையாடும்
நுண்புள்ளிகளில்
வியப்பின் உச்சத்தையும்
கூர்ச்செரியும் பயத்தையும்
இணைத்த பரவளையமே
என்னை உருவாக்கியதாக சொன்னான்
கருப்பு சட்டைக்காரன்

நானே என் தங்கையை
கற்பழித்தும்
நானே என் சகோதரனை
வெட்டிச் சாய்த்தும்
நானே என் உறவுகளை
பூண்டோடு அழித்துக்கொண்டே
தசம பின்னங்களில்
விரவுகிறேன்

எச்சரிக்கிறேன் .....

சுழி, இயல், தசம, பின்னங்களற்று
பரவளையம்
நீள்வளையங்களற்று
நானென் பெரும்பான்மை
அடைவதற்குள்
நீங்கள் ஒரு நேர்க்கோட்டை
வரையவில்லை எனில்
கிழிந்து போகும் வரைபடம்......

கனவுகள் அளாவிய பாடகன்

நிலவினை பிடித்து
உனக்கென பரிசளிக்க விரும்பி
கிரணங்கள் பிடித்தேறி
கைக்கெட்டும் தொலைவிலிருக்கும்
பல பொழுதுகளில்
முகத்தில் நீர்தெளித்து
பகற்கனவுகள் பலிக்காதென்றாய்..

அமர்ந்து கதைத்த
படித்துறைகளை, திண்ணைகளை
ஒலித்து ஓய்ந்த
வளையொலிகளை, கொலுசொலிகளை
கடக்கும் இத்தெருவின்
இன்னும் சில காட்சிப்பதிவுகளை
என்னுள் திணித்து
நீமட்டும் விலகிய
இந்த ஊடற்பொழுதில்

காதல் விஷமுண்டு
நிலைத்திருக்கும் என்னிலிருந்து
வாசிக்கப்பட்ட
வேதாளக் கவிதைகள்
இறக்கைகள் அணிந்தபடி
நண்பர்கள் கடந்து
உறவுகள் கடந்து
பால்வீதிகள் கடந்தபின்
தடுக்கும் திராணியற்று
பின்தொடர்கிறேன் நானும்

நீயென நினைத்து அணைத்துவிட்ட
பிழைஉரு பொருட்களாய்
தூண்களும் மரங்களும்
முள்வேலி கற்களும்
அணைத்த கையிரண்டில்
ஏக்கங்கள் வரைந்து
ஒரு பெருமூச்சினை சிந்தியபடி
நீயின்றி வெடித்த உதடுகளுக்காய்
பருகவென வைத்திருக்குமென்
குருதிகள் கடந்து

பிரிவின் பெருவீச்சினில்
அங்கிங்கெனாதபடி
எங்கும் நிறைந்தொழுகும்
அன்பின் வேட்கையினால்
கசந்து கசந்து
நீர்த்த உணர்வுகளின்
நாற்சந்திகள் கூடும் இரவுகளில்
கூர்ச்செறியும் அச்சங்களோடு
தனித்திருக்கும் இடம் தேடி
யாவற்றிலிருந்தும் நானே என்னை
ஒளித்து கொண்டுவிடுகிறேன்

ஒளித்தபின் வேறென்ன?
நிலவினை பிடித்து
உடைந்த குடைக்கம்பியில் செருகி
சுட்டு
சுட்ட நிலவை
எற்றி எற்றி தூர எறிந்தபடி
என்னுள்
மீதமாய் நின்றதெல்லாம்
அவிழ்ந்த விழிகளால்
கனவுகள் அளாவிய பாடகன்...

காதலென சொல்லவா.?"

எவ்வாறு விளங்க சொல்வேன்
இந்த காதலை..?

செனாயின்
சோகமான பிளிறலைப்
போன்றதாக சொல்லவா?

திகட்டாதிருக்கும்-ஒரு
பொருளற்ற பாடலைப்
போன்றதாக சொல்லவா?

தூக்கமற்ற ஓர் இரவின்
வீழ்படிவென சொல்லவா?

ஓர் புள்ளியிலிருந்து
எல்லா திசைகளில் விரியும்
உயிர்வதையென சொல்லவா?

எனக்கென வியாபித்திருக்கும்
ஆழ்நிலை பிரபஞ்சமெனவா?

தீர்ந்த சொல்லோடு
வெற்றிட முடிவிலியில்
நிர்கதியாய் நிற்குமென்னிலிருந்து
உயிரை பற்றியதோர் புனைவெனவா
இந்த காதலை....?

மாய வலைபின்னி காத்திருக்கும்
கோடானகோடி கற்பனைகளில்
சலித்து போகிறது
ஒவ்வொரு இரவின் முடிவும்...

எழுதியது எழுதியபடி
இரைந்து கிடக்க
விளங்க சொல்லவந்த
நானும் பாடலும்
"காதல்"என முனகியவாறு
கால்நீட்டி உறங்கிப்போகிறோம்!

"பறவையாதல் வினை"

நாளை பற்றிய
கனவிலிருக்கும் காளான்களெனவும்
பிறவிபெருங்கடலென
கோடையை கடந்திருக்குமோர்
மீன்கொத்தும் நாரைஎனவும்
விரிசல் விழுகிறது
கற்பனை எதார்த்த கோட்டில்

நீயில்லாத இன்றின்
எதார்த்தச் சங்கிலியில்
ஊசல்குண்டென அலைவுறும்
யாதுமற்றதோர் கனவிற்கான
புற்றீசல் எண்ணங்களை
தாழிட்டு திரும்புகையில்
மதகுடைந்து விரவும்
சொட்டென தொடங்கும் நதி.....

பாடலின் அறிமுகமில்லாத
ஒரு பொழுதில்
துண்டு துண்டாய் வெட்டுண்ட
கனவுகளை நீட்டியபோது
சேதாரம் தரமறுக்கும்
காலத்தின் கையில்
கிண்ணம் நிறைய என்மூச்சு

பாடலாதல்
கருணை தற்கொலைஎனவும்
பறவையாதல் முக்திஎனவும்
பறவையாதல் வினைபற்றி
அப்பொழுதெல்லாம் அறிந்திருக்கவில்லை.....


கண்டநகர்வெனவரும் காட்சிபிழையில்
தலைசுற்றி அரற்றியிருக்கும்
என்னை திறந்தால்
விடியாத இரவொன்றும்
வெற்றிடமுமாய் கிடைக்குமென
நினைத்திருக்கையில்
நிரம்பி வழியும் பொருட்டு
உயிரோடு புணர்ந்து கொண்டு
புலர்கிறது என் கானம்....

இணையினின்று
தனித்த பறவையின் தற்கொலையென
காற்றின் பெருவெளிகளில்
பறவையின் சிறகுகளென
உங்களுக்காக
பாடல்களை உதிர்த்தவாறு
உயர உயரமேவி
சிறகுகள் தீர்ந்த பொழுதில்
என் கண்களை மூடிக்கொண்டபிறகு
கைவீசி நடக்குமென் காதல்.....

நிலவெரியும் இரவினைப் பற்றியதே

நிலவெரியும் இரவினைப் பற்றியதே
அவனுடைய கவலையெல்லாம்...!


யுகமென கழியும்
ஒவ்வொரு இரவிலும்
பாடுபொருளைத்
தேடி அலைவதாகச் சொன்னான்.......


இவ்விரவில் ....
மேகங்கள் தன்னை விட்டு
விலகிசெல்வதாகவும்
மோகினியொன்று தன்னை
அழைப்பதாகவும்
யாரோ தன் காதருகில்
திரும்ப திரும்ப
ஆணி அறைவதாகவும் சொன்னான்


ஒரு தீவுச் சண்டையில்
புதைக்கபடவேண்டிய ஒராயிரத்திற்க்காக
ஒரு தீபகற்ப தேர்தலில்
விலைபேசப்பட்ட பலகோடிகளைப்
பற்றிய ஒரு கதையையும்


கோத்ரா தெருவொன்றில்
ஒரு தாயின்
வயிற்றை கிழித்து
உள்ளிருந்த குழந்தையை எடுத்து
குத்திக்கொன்ற ஒரு கதையையும்
ஆறுதலாகச் சொன்ன போது....


நிலவினை வெறித்தபடி
என்னையும் சேர்த்து
யாருமே அவனுக்காக
வாழ்வதில்லை என்பதாக சொன்னான்....


அவளைப் போலவே -இந்த
இரவும் நிலவுமென
ஓயாது புலம்பியிருந்தான்...


நேற்றிரவில்....
பாடுபொருள் கிடைக்காத விரக்தியில்
தன்னைத்தானே
தூக்கிலிட்டு செத்தான் ...

பாடுபொருளாகிபோன
அவனுடையதெல்லாம்
நிலவெரியும் இரவினைப் பற்றியதே.......!

"கண்ணீரின் சாவி"

Tears And Painதத்துவத்தின் சாவி
குழந்தைகளின் கேள்விகள்
என்றறிந்த போது
கண்ணீரின் சாவி
எதுவாயிருக்குமென சிந்தித்திருந்தேன்..!

இரத்தவெறி கொண்ட
கொடியோனின் பெருங்கரங்கள்
என் கழுத்தை நெரித்தபோது
நிறைமாத கர்ப்பிணியாய்
செய்வதறியாது நின்றாய்...

பிறகொரு நாள்
நீயும் அவனோடு சேர்ந்துகொண்டு
கண்கள் முதலான
புலனுறுப்புகளைத் தின்ன பழக்கினாய்...!

உன்
கோரைப் பற்களாலும்
கூர் நகங்களாலும்
பாலுறுப்புகளையும் அறுத்து
தின்ன கொடுத்தபோது
உடலெங்கும் புழுக்களாய் நெளிய
நானென் சுயத்தை இழந்திருந்தேன்...!

கடைசியாக.....
வேகு வேகேன்ற
மூச்சிரைச்சலோடு ஓடிவந்து
துடித்துதிமிறிய ஒரு இதயத்தை
கையிலேந்தி தின்னகொடுத்தாய்...!

அவசரமாய் விழுங்கி
அடிஉதட்டில் உயிர்ஒழுக
அலறி விழுந்தவனின் சடலத்தை
மிச்சமில்லாமல் தின்றுவிட்டு
பாடலொன்றை பிரசவித்து
ரணக்குரலெடுத்து அழுதிருந்தாய்...!

பிணந்தின்னிக் கழுகு

கீழ்வெண்மனியை எரித்துவிட்டு
இரத்தம் சொட்டிய
அலகினை சிலுப்பியபடி
பிணங்களாலான இவ்வுலகை
வட்டமடிதிருக்கிறது
பிணந்தின்னி கழுகொன்று.......

"எழவு விழுந்த வீட்ல
மசமசன்னு பேசிகிட்டிருந்தா எப்படி ?
ஆளாளுக்கு ஒரு வேலய பாருங்கப்பா"

கழுகினை தொழும்
பிணங்களின் மத்தியில்
மாட்டிக்கொண்ட பாரதியை
கூர்ந்தபடி நானும் பாடலும்.......

"வாழ வேண்டிய வயசு
என்ன பண்றது
சாதியையும் சாமியையும்
பகைசுக்கிட்டா இப்படிதான்"

அம்மணமாய் நின்ற
ஊரின் மத்தியில்
ஆடைகட்டி வந்தவனைநோக்கி
எக்காளமிட்டு சிரித்தன பிணங்கள்.....

"தப்படிக்க பறையனுக்கு
ஆள் அனுப்பியாச்சா ?
மாடசாமி மக படிக்கிறாளாமே
சுக்கு பயல்களுக்கு வந்த வாழ்வ பாத்தியா"

தன் சாதிக்கென்று
ஆளுக்கு கொஞ்சமாய்
ஜனநாயகத்தை
பிய்த்து கொண்டோடிய
பிணங்களின் மத்தியில்
நிர்வாணப்படுத்தபட்டான் பாரதி....

"நாளைக்கு காடமத்திறத்துக்கு
அம்பட்டனுக்கு தகவல்சொல்லிருங்க
அப்பறம்
கம்யுனிஸ்டு ,கொடியேத்தம்னு
எங்காவது போயிரப்போறான்"

இப்படித்தான்
அவமானபடுத்தப்பட்டும்
நிர்வாணப்படுத்தப்பட்டும்
பாடையேற்றப்படுகிறான் பாரதி
பிணங்களின் உலகில்....

ஒருநாளில்லை ஒருநாள்
ஒரு கையில்
சாட்டையென சுழற்றி
எருமையின் மீதேறி
சுற்றி சுழன்று
ஒவ்வொரு பிணங்களின் முதுகுத்தண்டில்
அழுந்த பதியுமாறு
சுண்டி இழுப்பேன் என்பாடலை
மானுடம் சொல்லிசொல்லி

பிறகொரு நாள்
பிணங்களின் தழும்புகள் தடவி
"ஹோ"வென அழுதபடி
சொல்லடா பாரதீ!
என்னை சுடர்மிகும் அறிவுடன்
ஏன் வளர்த்தாயென்பேன்....
கழுத்தறுந்த கழுகின்திசை விரல்நீட்டி
கண்சிமிட்டி சிரித்திருப்பான்
ஞானசெறுக்கன்.....

கசந்து போன முத்தம்

உயிரை ஒதுக்கி வைத்து
உன்னை நோக்கியிருக்கையில்
தூரமாய் தேய்ந்து
புள்ளியாய் குறுகும் தொலைவில்
திரும்பிப் பார்த்து
புன்னகைத்த விடைபெறுதலில்
கசந்து போகிறது ......
கேட்பேனென நீயும்
தருவாயென நானும்
நினைத்திருந்த ஒரு முத்தம்....

எங்கெங்கு காணினும் இயேசுவடா!

இயேசுவானவர் ஒருநாள்
யாருமற்ற தெருவொன்றின்
சாலையோரத்தில்
நிர்வாணமாய் நின்றிருந்த
மனநிலை சரியில்லாதவளுக்கு
காமஇச்சைகள் ஏதுமற்று
அவளது ஆடைகளைசரிசெய்து
அழுதிருந்தார்


வேறொருநாள் வேறோருடத்தில்
தன்ஆடைகள் அழுக்காவதைப்
பொருட்படுத்தாது
தள்ளுவண்டிகாரனின் மூட்டைகளை
சரிசெய்து கொடுத்து
இவ்வுலகின் இதயங்கள்
செவிடாகும்படியாக
"வருந்தி பாரம் சுமப்பவர்களே!
என்னிடத்தில் வாருங்களென"
கூவிக்கொண்டிருந்தார் மௌனமாய்....


மற்றுமொரு நாளில்
"ஒளியான அவர்
இவ்வுலகில் வாழ்ந்தார்"
என்னும்படியாக
பார்வையற்ற ஒருவரை
கைப்பிடித்து
சாலையை கடக்கச் செய்தார்


தேநீர்கடைச் சிறுவனோடு
அப்பங்களை பகிர்ந்துண்டவாறும்.........


வயதான மூதாட்டியின்
மலமிருந்த கால்களை
கழுவியவாரும்......


எங்கெங்கு காணினும் திரிந்திருந்த
இயேசுவானவரை ஒவ்வோரிடத்திலும்
சிக்கென பிடித்திறுக்கி
முத்தமிட்டவாறு சொன்னேன்......
"நீயே வழியும் சத்தியமும்
ஜீவனுமாயிருக்கிறாய்"

நிலவென வாழ்வதும்....! கதிரென பொழிவதும்.....!

ஆழ்ந்து அகன்ற நுண்ணியமாய்
பாட்டெழுதி பெரிதுஉவந்துகொண்ட
ஒரு பொழுதில்
பொருளற்ற பாட்டெழுதி
குழிந்த கன்னங்களில்
சுழியிட்டு சிரிதிருந்தாய்....!

யாருமற்றதோர் பெருவெளியில்
எதுமற்றதோர் திசைநோக்கி
நானுமற்றதோர் காதலில்
அக்ரினயென வெறித்தவாறு
ஏகாந்தத்தன்னிலிருந்தாய்

மதனோற்சவம் நிகழ்ந்தேறிய
ஒரு பொழுதில்
நெடுநாட்களுக்கு பிறகான
சிறு பிரிவொன்றை சிந்தித்திருந்தாய்....!

காற்றும் பெரும்புயலும்
சூழ்க சூழ்கவென்றிருந்த
ஒரு ஊடல் பொழுதில்
ஒரு நீர்க்குமிழி ஏந்தியதாய்
களைப்புற்றிருந்தாய்.....

எவ்வளவு அழகாய்
காதலிதிருக்கிறாய் என்னை நீ...

நானென்றும்....
என்காதலென்றும்...
உணர்வுகளென்றும்....வலிகளென்றும்......
சொல்லியிராத ஒரு பாடலை
எழுதியபோதுதான் அறிந்தேன்..
நிலவென வாழ்வதும்....!
கதிரென பொழிவதும்.....!

"சாம்பல் கசிகிறது பாடலாய்"

காற்றில் கசிந்துருகிய
காதலின் பாடலை
எரித்து சாம்பலாக்கி
இருகைகளில் ஏந்தி
ஓடிக்கொண்டிருக்கும் நான் மற்றும்.....

ஓர் அழகான பாடலை
எரித்துவிட்ட உறுத்தலோடு
ஓடுபவனின் தன்மையறியாது
கூர்வாளினை
கையில் ஏந்தியபடி
விடாது துரத்தும் நிலவு....

ஓர் இருள்வெளியில்
மடக்கி பிடித்து
தொண்டையில் வாளேற்றி
பற்கள் காட்டி சிரித்தபோது
ஒரு பீநிக்சை போல்
சாம்பல் கசிகிறது பாடலாய்....