Sunday, December 25, 2011

ஆதியின் பேச்சுக்குரல்




காலமழை பெய்கிறது

காற்று நனைந்த வெளியில்
துளிர்க்கும் தளிரென
உயிர் பற்றிக்கொண்ட தேகங்கள்
முயங்கி சரிகின்றன

இசைக்க , வியக்க ,ஒளிரவென
இல்லாமல் போகவென
நேசம் சிக்கிக் கொண்டோடுகிற
பொழுதுகளின் நதியில்

நான் நனையாத துளிகள்
சூட்சமத்தின் கடலாகிறது .

மீந்திருக்கும் துளிகளில்
நனைந்து நனைந்து
இன்பம் துன்பம்
இரண்டுக்குமான விதையென
போதிமரத்தின் கிளையொத்து
வெடித்து படர்கிறேன்.

திறந்து கிடக்கும்
இவ்வளவு பெரிய நிலத்தில்
சாவியை தேடுகிறது வார்த்தை

ஆயுளை சிறைகொண்டு
சூட்சமக் கடலில்
ஒளிந்து கிடக்கிற

வார்த்தையின் உயரத்திலிருந்து
இடறிவிழும் துறவுகளில்
ஆதியின் பேச்சுக்குரல் கேட்கிறது
 —

ஊறிய உடலென மிதக்கும் சொல்


====================================
அறைந்து சாத்தப்பட்ட
அறையின் நிறங்களில்
பொழுதுகளை தேடுகிறேன்

என் கோப்பையில்
ஊறிய உடலென
மிதக்கும் சொல்லோடு
தொடங்குகிறது தனிமை

நன்மையிலிருந்து தேக்கவும்
தீமையிலிருந்து விலக்கவுமான
காமத்திற்க்கான கடவுள்சொல்லை

அருகில் அமர்ந்து
பருக தொடங்குகிறது
காற்றை போலிருக்கும்
உன் ஒளி மாய உடல்

கசங்கிய தாள்களென
இறைந்து கிடக்கிறது
உன்னை தேடும்
கரங்களின் சொற்கள்

அயர மறுக்கும் கண்கள்
சொல்லை போல் இருக்கும்
துயர உடலை
குடித்துவிட்டு வைக்கிறது
காலி அறையை ...
 — 

Saturday, December 24, 2011

கான்கிரீட் கவிதைகள் -5


தகர ஷீட்டுகளில்
அறைந்து பெய்யும் மழையில்
பாலிதீன் கூடாரங்களுக்கு உள்ளே
சன்னமாய் தேய்ந்து ஒலிக்கிறது
கல்தச்சரின் முனகல் உளி.

மௌனத்தின் கூடாரங்களில்
கூரையற்ற ஒரு உலகம்
நடுங்குகிறது..
 — 

கான்கிரீட் கவிதைகள் -4


கைப்பிடிச் சுவரில்லாத
ஐந்தாவது மாடியின் விளிம்பில்
நின்று எட்டி பார்க்கிறது
எதையாவது
பற்றிக்கொள்ள துடிக்கும் வாழ்வு

மழையில் நனைகிறது
தார்பாய்க்கு வெளியே
கால்நீட்டி உறங்குகிற
எனக்கும் உனக்குமுள்ள உறவு ...

கட்டி முடித்து
இவ்வளவு உயர வித்தியாசத்தை
அண்ணாந்து பார்ப்பவனை நோக்கி
சாயத் துவங்குகிறது கட்டிடம்
 

பறையின் வானம்


பழகிப்போனது....

கைபடாமல்
துண்டில் இடுகிறாய்
பரிமாறுதலின் துரோகத்தை ....

பசியின் இயலாமையை
முடிந்து செல்கிறோம் ...

பறத்தலை மறந்துவிட்டோம்
பறையின் வானம் நீலம்.....
 

அழுந்தி துடிக்கும் இமைகளின் பாதரச கனவுகள்


உறங்கும் தொலைவு வரை
கூடவே வந்துவிட்டு திரும்பவென
கெஞ்சி நிற்கும் உன் மௌனம்
ஒரு துயர்மிகு இசை

ஓர் வார்த்தையுமற்ற உன்னை
வெறுமனே புரட்ட துவங்குகையில்

மேலும் ஒருமுறை
உதறி விரித்து போடுகிறேன்
இந்த இரவை ...

ரயில் சினேஹிதத்தை போன்ற
நேற்றைய இரவை
நினைத்து பார்க்கையில்

மேலும் ஒருமுறை
உயர்த்தி காட்டுகிறேன்
தனிமையின் கோப்பையை ....
 

சொற்களின் பிடரி

சிறு சொல்லை 
சொல்லிவிடும் வேகத்தில் 
பெய்துவிடுகிறது மழை ....

சிறு மழைஎனினும் 
தேங்கிவிடும் பள்ளங்களில் 
ஈரமிருக்கும் 
"சொல்" ...

கான்கிரீட் கவிதைகள் -3

அள்ளும் மண்ணோடு 
வந்துவிடுகிற 
ஆணுறைகளை 

விதி எனவோ 
விளையாட்டெனவோ
வாரிப் போகிறாள்
சித்தாள்.....

கான்கிரீட் கவிதைகள் -2

வேலையற்ற 
மழைநாளில் 
பசியோடு உறங்குகிறது 
மூலதனம் ....

பசியின்றி தவிக்கிறது 
லாபம் ..

கான்கிரீட் கவிதைகள் -1

முன்பொரு நாள் 
சிறுவன் 
செத்து மிதந்த 
லிப்ட் குழியில் 

மிதக்கிறது 
நகரத்தின் 
சிறு துளி வெயில்

Friday, October 7, 2011

தனிமையில்.....

இந்த விடைபெறுதலில்
நான் சொன்ன எதையுமே
பூட்டி வைப்பதில்லை நீ.....

பின்னாளில்
திறக்கும் யாவற்றிலிருந்தும்
வெளிவரும் அதே வார்த்தைகளை
தயங்கி பின் படர்கிறாய்...

உன்னால் அசைகிறது 
திரைச்சீலை 
உன்னாலே மிகுகிறது
சுடர்....


அசைவதும் மிகுவதுமாக இருக்கிறது
மௌனம்.......

Thursday, August 25, 2011

எதிர்தகவு

சிகிச்சை பிரிவுக்கு வெளியே 
வளாகமெங்கும் 
ஒலித்து ஓயும் 
உன் அழுகுரலும் 

இந்த நொடி 
அடுத்த நொடியென
தொடங்கும் வாதையும்
எதிர்த்தகவிலிருக்கும்


Thursday, August 18, 2011

இன்மை

இன்றளவும் 
நம்புவதற்கில்லை......

முக்காலமும் 
நீ என்ற ஒருத்தி 
இல்லை என்பதை ....

Tuesday, August 16, 2011

பேரன்பின் பிடரி

இங்குதான் எங்கேயோ
வைத்தேன் என்றபடி
அறைமுழுவதும் தேடுகிறேன்

வெளி வரந்தாவிலும்
பலகணியிலும் முற்றத்திலும்
தேடி களைத்த பின்னும்
சமாதானம் செய்கிறாய்

அங்குதான் எங்கேயோ
பார்த்ததாக தேடத்துவங்குகிறாய்

நீயும் பொழுதும்

நீண்ட பகலை போல்
நீண்ட இரவைப்போல்
அவ்வளவு மௌனமாயிருக்கிறாய்

நீண்ட ஒரு பகலில்
நீண்டதொரு இரவில்
இருப்பதை போலவே
அவ்வளவு தனித்திருக்கிறேன்

நீயும் நீயும்

இந்த ஒரு பழக்கத்தையாவது
விட்டுவிட வேண்டுமென
கெஞ்சுகிறாய்...

பிறகு
கெஞ்சுவது உனக்கொரு
பழக்கமாகிவிடுகிறது

மோனத்திருநிலை

என் கால்மேல் காலிட்டு
கழுத்தை கோர்த்துக்கொண்டு
நீண்ட இரவிலிருந்து
காலத்தை எடுத்துவிட்டு
உறங்குகிறாய்

நிலை..

பசுமரக்கிளைகளில்
அணில்கள் தாவுவதை
வேடிக்கை பார்த்திருக்கிறாய்

அணில்களற்ற பசுமரங்கள்
பசுமரங்களற்ற அணில்கள்
பற்றி யோசிக்கும்
ஒவ்வொரு முறையும்

சமையலறையில்
பொங்கி தீர்கிறது நிலை..

Tuesday, August 9, 2011

இப்பொழுதும் 
உன்னை மட்டுமே 
நினைத்து கொள்கிறேன் 
கூடவே வந்துவிடுகின்றன 
கொலுசொலிகள் 

Friday, August 5, 2011

போகிற போக்கில் 
சொல்லிவிட்டு போகிறாய் 

நான்தான் 
நின்ற இடத்திலேயே 
நின்று கொண்டிருக்கிறேன்...
முன்பொரு நாள் 
ஒரு மழைகாலத்தில் 
உன்னை சந்திக்கவே விரும்பினேன் 

மழை வெயிலென 
மாறி மாறி 
வாழ்கையானாய் 
ஏதோ எழுதியபடி 
மேஜையில் அமர்ந்து 
உறங்கி விடுகிறேன்...

எதுவும் எழுதாத 
தாளோடும் பொழுதோடும் 
அமர்ந்திருக்கிறாய் நீ ,.
அணைத்து கிடப்பவனை 
முனகிக் கொண்டே 
மெல்ல விலகி படுக்கிறாய்....

கெஞ்சி கெஞ்சி 
கேட்ட பின்னும் 
இரவை பகலாக்குகிறாய் 
இந்தக்கணம் நீ கேட்கையில் 
சொல்வதற்கு ஏதுமில்லை 

முன்பொரு நாள் 
அவ்வளவு அழகாய் இருந்தாய் 

நான் சொல்லவுமில்லை....
விழுந்துவிட்டேனென நினைத்து 
சமையலறையிலிருந்து 
பதறி வருகிறாய் ...

உடைந்த உன்னை மட்டும் 
எதைக் கொண்டு அள்ளுவதென
புரியாமல் நிற்கிறேன் 
உடைத்தது யாரென தெரியவில்லை 
இறைந்து கிடக்கிறது பகல்.

யாரோ ஒருவனான -என்னை 
கடந்து போகிறாய் நீ 

Monday, August 1, 2011

..................................

விரும்பி கேட்பதாய்
புரிந்து கொண்டதாய் 
பாசாங்கு செய்கிற -நீ 
கேட்டதேயில்லை 
என்னால் சொல்லவே தெரியாத 
தனிமையின் மொழியை...

Saturday, March 12, 2011

பாலொளி நாளதை..





இங்ஙணம் வேறேதும் நினைவிராத...


மின்னும் புன்னகையோடும்


மீளவும் முடியாத
கொள்ளவும் இயலாத ஒளியோடும்


கூந்தலின் இழையால்
காற்றை வரைந்த அந்நாளை


நீ நீயென எழுதி தீர்க்கிறேன்..

வெற்றிடத்தில் வாழும் சிறகுகள்....



தொடங்காத பிறைகளென
ஆவல் சிறிதுமில்லை...


சொல்லாடா பொழுதின் கிளையை
இறக்கைகள் படபடக்க
இன்னும் இறுக பற்றினேன்....


மாண்பை அடுக்கிய பரணில்
வார்த்தைகளற்ற வாசமே மீந்தன...


உளறத் தெரியாத சாமரம்
பழகாத காற்றை நிறுத்தன...


நீரோட்டத்தில் விழுந்த பொருளென
போகிறது மௌனம்..
கரையொதுங்கிய மலரோ பொருளோ
கையோடு நதியை எடுத்து வருவதில்லை....


தனித்து விடப்பட்ட ஒரு சிறகுக்கு
அலைவுறத் தெரிந்திருக்கிறது
என்பதொன்றும் பெரிதில்லை....


யாரும் இயங்காத வெளியில்
வீழ்படிவாகும் இவ்வொலி
யாருடையதுமில்லாத போது


உன் இருத்தல் மட்டுமேயுள்ள..
வார்த்தைகளின் சுழலா உலகில்
உள்ளீடற்றவையை திறந்து பார்ப்பதில்
என்ன இருக்கிறது??

மெய்மையின் நிறப்பிரிகை...



நானென் வரிகளை


முகத்தின் பிம்பங்களால் எழுதுகிறேன்....






சூன்யத்தின் நகலென விளங்கும் என் முகம்


ஒரு விதையாகவுமிருக்கலாம்....






கண்ணாடியை சொல்லி குற்றமில்லை...


தளம் மாற மாற


நிறம் மாறிக்கொண்டே இருக்கிறது






ஆதிக்கிழக்கின் முதல் கீற்றிலிருந்து


வெள்ளொளியை நம்பி திரிந்தோம் நாம்






எனினும் என்னுடையதைவிட


என் பிள்ளையின் வாள்


கூராயிருக்கிறது....






புரிவதற்குள் கடந்துவிடும் வினைகளால்


அடுத்த வினாடிகள்


கானல் திரைக்குள்ளிருக்கும்






எந்த வரையறையும் நிலையற்றதென....


நிலத்தை நீரும்


நீரை தீயும்


தீயை நீருமென...


ஒரு மெய்யிலிருந்து கைநழுவி


மறு மெய்யை பற்றிகொள்ளும்


அமானுஷ்யமிருக்கையில்






இது என் நிறமென


இதுதான் என் முகமென


எப்படி நம்புவது??