Sunday, December 25, 2011

ஆதியின் பேச்சுக்குரல்




காலமழை பெய்கிறது

காற்று நனைந்த வெளியில்
துளிர்க்கும் தளிரென
உயிர் பற்றிக்கொண்ட தேகங்கள்
முயங்கி சரிகின்றன

இசைக்க , வியக்க ,ஒளிரவென
இல்லாமல் போகவென
நேசம் சிக்கிக் கொண்டோடுகிற
பொழுதுகளின் நதியில்

நான் நனையாத துளிகள்
சூட்சமத்தின் கடலாகிறது .

மீந்திருக்கும் துளிகளில்
நனைந்து நனைந்து
இன்பம் துன்பம்
இரண்டுக்குமான விதையென
போதிமரத்தின் கிளையொத்து
வெடித்து படர்கிறேன்.

திறந்து கிடக்கும்
இவ்வளவு பெரிய நிலத்தில்
சாவியை தேடுகிறது வார்த்தை

ஆயுளை சிறைகொண்டு
சூட்சமக் கடலில்
ஒளிந்து கிடக்கிற

வார்த்தையின் உயரத்திலிருந்து
இடறிவிழும் துறவுகளில்
ஆதியின் பேச்சுக்குரல் கேட்கிறது
 —

ஊறிய உடலென மிதக்கும் சொல்


====================================
அறைந்து சாத்தப்பட்ட
அறையின் நிறங்களில்
பொழுதுகளை தேடுகிறேன்

என் கோப்பையில்
ஊறிய உடலென
மிதக்கும் சொல்லோடு
தொடங்குகிறது தனிமை

நன்மையிலிருந்து தேக்கவும்
தீமையிலிருந்து விலக்கவுமான
காமத்திற்க்கான கடவுள்சொல்லை

அருகில் அமர்ந்து
பருக தொடங்குகிறது
காற்றை போலிருக்கும்
உன் ஒளி மாய உடல்

கசங்கிய தாள்களென
இறைந்து கிடக்கிறது
உன்னை தேடும்
கரங்களின் சொற்கள்

அயர மறுக்கும் கண்கள்
சொல்லை போல் இருக்கும்
துயர உடலை
குடித்துவிட்டு வைக்கிறது
காலி அறையை ...
 —