Friday, January 15, 2010

தலைமுறைகளுக்கான சதுரங்க ஆட்டபிழை




விழித்துப் பார்க்கும் போது
நான் கொலை செய்யப்பட்டிருந்தேன்


தர்க்கங்களின் காய்நகர்த்தி
முடிவற்று சதுரங்கமாடும்
மர்ம நபர்களால்
கொலையுண்டு கிடக்கிறேன்


ரவைகளற்ற கேள்வியும்
மழுங்கலான வார்த்தைகளையும் ஏந்தி
எப்பொழுதும்
முடிவை நிச்சயப்படுத்திக்கொண்டு
ஆட்டம் தொடங்குகிறதெனினும்
ஆட்டவிதியே
தவறெனக் கதறும் -என்னின்
குரல்வளையை நெரிக்கிறது
பரிணாம ஏற்றதாழ்வுகள் .


பரிணாமம் காலத்தின் நேர்தகவேனில்
இங்கே விளையாட வேண்டியது
சதுரங்கமே அல்ல..
அது முடிவற்ற பாதையில் -நீளும்
ஓட்டமென்பதை சொல்வதற்குள்
வெற்றியை பிரகடனபடுத்துகிறார்கள்


தன்னை நிலைநிறுத்திகொள்வதற்காக
வீசிய ஆயுதங்களை
என்னிலிருந்து பிடுங்கிக்கொண்டு
வெறுங்கைவீசி திரும்புகிறார்கள்


அவர்களிடம் சொன்னதெல்லாம்
வரலாறு எனக்கு சொன்னதுதான்


"என் உடலும்
உங்கள் விவாதமும் வீச்சமெடுக்கும்
அடுத்த தலைமுறையில்
நீங்கள் மண்ணாகி போவீர்கள்
உங்கள் பிள்ளைகள்
மரமாகி போவார்கள்
நான் உரமாகி போவேன்"

அச்சம் -ஓர் அரிச்சுவடி



இப்போது நினைத்து பார்க்கிறேன்

சாவதற்கான பயமிருந்த
பால்ய காலங்களில்
அன்றாட இருளும்
விநோத உயிர்களின் சத்தங்களும்
சாத்தானுக்கான காத்திருப்பை நிகழ்த்தின...

என் நிழலைக் கண்டே
பயந்திருந்த இரவில்
கால்களை உதறி உதறி
அப்பாவின் கழுத்தை கட்டிக்கொண்டு
அழுதேனென்றும்
இரவு முழுவதும்
அப்பாவின் தோளிலேயே
தூங்கியதாகவும் சொல்லப்பட்டது

ஒரு விடியலில்
கூரையின் மூங்கில் கழியிலிருந்து
நெடுநீண்ட பாம்பொன்று
முகமருகே தொங்கியது
வெகுநாட்கள்வரை நிழலாடின...

மேலும் பாம்புகள் துரத்துவதாகவே
கனவுகள் சூழ்ந்தன.

முன்னறிவிக்கப்படாத சாத்தானின் வருகை
பாம்பின் தீண்டுதலால்
கொடூரமான இதயமொன்று
பரிசளிக்கப்பட்டது

அது பின்னொரு நாளில்
ஆவாரஞ்செடியில்
புணர்ந்திருந்த சாரைப்பாம்புகளை
மண்வெட்டியால் இருதுண்டுகளாக்கியது

என் மனைவியின் யோனியிலிருந்து
நீண்ட வாலோடும்
நீட்டியிழுக்கும் நாக்கோடும்
துருத்திய கண்களோடும்
பிறக்கவிருக்கும் உயிரிக்காய்
ஆயத்தமாயிருக்கையில்....

வாழ்வதற்கான பயத்தில்
உங்களின் பரிசுத்த ஆவிக்கான காத்திருப்பை
என்மீது திணிக்கும் இக்காலங்களில்

பாம்புகளை தொலைவிலிருந்தே
வேடிக்கை பார்க்கிறேன்