Saturday, December 24, 2011

கான்கிரீட் கவிதைகள் -5


தகர ஷீட்டுகளில்
அறைந்து பெய்யும் மழையில்
பாலிதீன் கூடாரங்களுக்கு உள்ளே
சன்னமாய் தேய்ந்து ஒலிக்கிறது
கல்தச்சரின் முனகல் உளி.

மௌனத்தின் கூடாரங்களில்
கூரையற்ற ஒரு உலகம்
நடுங்குகிறது..
 — 

கான்கிரீட் கவிதைகள் -4


கைப்பிடிச் சுவரில்லாத
ஐந்தாவது மாடியின் விளிம்பில்
நின்று எட்டி பார்க்கிறது
எதையாவது
பற்றிக்கொள்ள துடிக்கும் வாழ்வு

மழையில் நனைகிறது
தார்பாய்க்கு வெளியே
கால்நீட்டி உறங்குகிற
எனக்கும் உனக்குமுள்ள உறவு ...

கட்டி முடித்து
இவ்வளவு உயர வித்தியாசத்தை
அண்ணாந்து பார்ப்பவனை நோக்கி
சாயத் துவங்குகிறது கட்டிடம்
 

பறையின் வானம்


பழகிப்போனது....

கைபடாமல்
துண்டில் இடுகிறாய்
பரிமாறுதலின் துரோகத்தை ....

பசியின் இயலாமையை
முடிந்து செல்கிறோம் ...

பறத்தலை மறந்துவிட்டோம்
பறையின் வானம் நீலம்.....
 

அழுந்தி துடிக்கும் இமைகளின் பாதரச கனவுகள்


உறங்கும் தொலைவு வரை
கூடவே வந்துவிட்டு திரும்பவென
கெஞ்சி நிற்கும் உன் மௌனம்
ஒரு துயர்மிகு இசை

ஓர் வார்த்தையுமற்ற உன்னை
வெறுமனே புரட்ட துவங்குகையில்

மேலும் ஒருமுறை
உதறி விரித்து போடுகிறேன்
இந்த இரவை ...

ரயில் சினேஹிதத்தை போன்ற
நேற்றைய இரவை
நினைத்து பார்க்கையில்

மேலும் ஒருமுறை
உயர்த்தி காட்டுகிறேன்
தனிமையின் கோப்பையை ....
 

சொற்களின் பிடரி

சிறு சொல்லை 
சொல்லிவிடும் வேகத்தில் 
பெய்துவிடுகிறது மழை ....

சிறு மழைஎனினும் 
தேங்கிவிடும் பள்ளங்களில் 
ஈரமிருக்கும் 
"சொல்" ...

கான்கிரீட் கவிதைகள் -3

அள்ளும் மண்ணோடு 
வந்துவிடுகிற 
ஆணுறைகளை 

விதி எனவோ 
விளையாட்டெனவோ
வாரிப் போகிறாள்
சித்தாள்.....

கான்கிரீட் கவிதைகள் -2

வேலையற்ற 
மழைநாளில் 
பசியோடு உறங்குகிறது 
மூலதனம் ....

பசியின்றி தவிக்கிறது 
லாபம் ..

கான்கிரீட் கவிதைகள் -1

முன்பொரு நாள் 
சிறுவன் 
செத்து மிதந்த 
லிப்ட் குழியில் 

மிதக்கிறது 
நகரத்தின் 
சிறு துளி வெயில்