Friday, August 7, 2009

காதலென சொல்லவா.?"

எவ்வாறு விளங்க சொல்வேன்
இந்த காதலை..?

செனாயின்
சோகமான பிளிறலைப்
போன்றதாக சொல்லவா?

திகட்டாதிருக்கும்-ஒரு
பொருளற்ற பாடலைப்
போன்றதாக சொல்லவா?

தூக்கமற்ற ஓர் இரவின்
வீழ்படிவென சொல்லவா?

ஓர் புள்ளியிலிருந்து
எல்லா திசைகளில் விரியும்
உயிர்வதையென சொல்லவா?

எனக்கென வியாபித்திருக்கும்
ஆழ்நிலை பிரபஞ்சமெனவா?

தீர்ந்த சொல்லோடு
வெற்றிட முடிவிலியில்
நிர்கதியாய் நிற்குமென்னிலிருந்து
உயிரை பற்றியதோர் புனைவெனவா
இந்த காதலை....?

மாய வலைபின்னி காத்திருக்கும்
கோடானகோடி கற்பனைகளில்
சலித்து போகிறது
ஒவ்வொரு இரவின் முடிவும்...

எழுதியது எழுதியபடி
இரைந்து கிடக்க
விளங்க சொல்லவந்த
நானும் பாடலும்
"காதல்"என முனகியவாறு
கால்நீட்டி உறங்கிப்போகிறோம்!

No comments:

Post a Comment