Friday, August 7, 2009

கனவுகள் அளாவிய பாடகன்

நிலவினை பிடித்து
உனக்கென பரிசளிக்க விரும்பி
கிரணங்கள் பிடித்தேறி
கைக்கெட்டும் தொலைவிலிருக்கும்
பல பொழுதுகளில்
முகத்தில் நீர்தெளித்து
பகற்கனவுகள் பலிக்காதென்றாய்..

அமர்ந்து கதைத்த
படித்துறைகளை, திண்ணைகளை
ஒலித்து ஓய்ந்த
வளையொலிகளை, கொலுசொலிகளை
கடக்கும் இத்தெருவின்
இன்னும் சில காட்சிப்பதிவுகளை
என்னுள் திணித்து
நீமட்டும் விலகிய
இந்த ஊடற்பொழுதில்

காதல் விஷமுண்டு
நிலைத்திருக்கும் என்னிலிருந்து
வாசிக்கப்பட்ட
வேதாளக் கவிதைகள்
இறக்கைகள் அணிந்தபடி
நண்பர்கள் கடந்து
உறவுகள் கடந்து
பால்வீதிகள் கடந்தபின்
தடுக்கும் திராணியற்று
பின்தொடர்கிறேன் நானும்

நீயென நினைத்து அணைத்துவிட்ட
பிழைஉரு பொருட்களாய்
தூண்களும் மரங்களும்
முள்வேலி கற்களும்
அணைத்த கையிரண்டில்
ஏக்கங்கள் வரைந்து
ஒரு பெருமூச்சினை சிந்தியபடி
நீயின்றி வெடித்த உதடுகளுக்காய்
பருகவென வைத்திருக்குமென்
குருதிகள் கடந்து

பிரிவின் பெருவீச்சினில்
அங்கிங்கெனாதபடி
எங்கும் நிறைந்தொழுகும்
அன்பின் வேட்கையினால்
கசந்து கசந்து
நீர்த்த உணர்வுகளின்
நாற்சந்திகள் கூடும் இரவுகளில்
கூர்ச்செறியும் அச்சங்களோடு
தனித்திருக்கும் இடம் தேடி
யாவற்றிலிருந்தும் நானே என்னை
ஒளித்து கொண்டுவிடுகிறேன்

ஒளித்தபின் வேறென்ன?
நிலவினை பிடித்து
உடைந்த குடைக்கம்பியில் செருகி
சுட்டு
சுட்ட நிலவை
எற்றி எற்றி தூர எறிந்தபடி
என்னுள்
மீதமாய் நின்றதெல்லாம்
அவிழ்ந்த விழிகளால்
கனவுகள் அளாவிய பாடகன்...

No comments:

Post a Comment